தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்,
கூலி மற்றும் போலி ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. எனப்படும்
மத்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதி நிலை, பொருளாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின்
செயல்பாடு, பொது மற்றும் சமூகத் துறைகள் ஆகியவற்றின் 2011 - 12ம்
ஆண்டுக்கான தணிக்கை குறித்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்
தலைவரின் அறிக்கைகள் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
அதில், தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 24 சதவிகித குடும்பங்களே
முழுமையாக பயனடைந்தன என்றும், பதிவு செய்த 76 லட்சத்து 49 ஆயிரம்
குடும்பங்களில் 14 லட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களே முழுப் பயனடைந்ததாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலி பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், 90
ரூபாய் முதல் 119 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க வேண்டிய தினக்கூலியை 72
ரூபாய் முதல் 83 ரூபாய் என்ற அடிப்படையிலே வழங்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினக் கூலி பட்டியலில் போலியான ஆட்களின்
பெயர்களைச் சேர்ந்து திட்ட நிதி கையாடப்பட்டதாகவும் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்புக்குரிய பொருட்கள் குறித்து கண்காணிப்பு அமைப்பு இல்லை என்றும்,
இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள், 56 நகராட்சிகள், 64 பேரூராட்சிகள் 2009
- 2010ம் ஆண்டுக்கான கணக்குகளை அளிக்கவில்லை என்று அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒரு முறை
கூடவில்லை என்றும், பேரிடர் மேலாண்மை விதிகள் மாநில அரசால் இன்னும்
வகுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகையில்
முன்னெச்சரிக்கை சாதனங்கள் இயங்கும் நிலையில் இல்லை என்றும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாகுபடி நிலங்கள் பிற காரணங்களுக்காக மாற்றப்படுவதை தடுக்க எவ்வித
கட்டுப்பாடும் இல்லாததால், 2007ம் ஆண்டு 24 லட்சம் ஏக்கராக இருந்த
பயிரிடப்படாத நிலம் 2010ம் ஆண்டில் 25 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்து
விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல் தணிக்கை துறை அறிக்கையில் பல்வேறு
திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
Reference:http://www.tamil.oneindia.in
Reference:http://www.tamil.oneindia.in
No comments:
Post a Comment