இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள்
அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின்
விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர்
வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான்
வீரத்தாய் குயிலி...
இலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில்
பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி
வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்...வேலுநாச்சியாரின்
வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக
இருந்தவை... வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை
உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலில்..
1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து
போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு
நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன்
முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி
ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர்
சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும்
கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது
பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என்ற
பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்,...
விருப்பாட்சி பாளையம் கோபால் நாயக்கர்
விருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக
இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி
சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.
விருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில்
அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை
மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால்
வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு
காட்டிக் கொடுத்து வந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில்
இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது
வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க
தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார்
ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன்
என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி
வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க
வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின்
குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.
மெய்க்காப்பாளரான குயிலி
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும்
நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால்
வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த
போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே
செய்தவர் வேலுநாச்சியார்.
போர்க்களத்தில் குயிலி..
மருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது
ஒற்றர் குயிலி
ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை
வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில்
ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன.
போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி
திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான்
வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது
என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம்
வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது
வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி
என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை
மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.
தற்கொலைப்படையான குயிலி
குயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார்
படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன
ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று
கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு
ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச்
சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை
சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு
வெளியேறினான்... வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை
ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய்
குயிலி... ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின்
பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.. இந்த வீரத்தாய்
குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.
Reference:http://www.tamil.oneindia.in
No comments:
Post a Comment